அரக்கோணத்தில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளிப்பு…!!
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அசோக் நகர் அன்னை இந்திரா தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிதீஷ்கண்ணா(3) என்ற மகனும், அம்மு என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை அரக்கோணம் புது பஸ் ஸ்டாண்டுக்கு சிவகுமார் சென்றார். அப்போது அவர்களது வீட்டில் இருந்து குபுகுபுவென தீயும், கருகிய வாடையும் வீசியது. இதை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து சிவகுமாரிடம் தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த சிவகுமார் ஓடிவந்து வீட்டுக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது மனைவி, தனது 2 குழந்தைகளும் தீயில் எரிவதை கண்டு அலறித்துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டனர்.
ஆனால் தீ விபத்தில் திவ்யா அணிந்திருந்த சேலை முழுவதும் எரிந்து உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அதே போல 2 குழந்தைகளும் முகம், கை, கால் என எல்லா உடல் பாகங்களும் தீயில் கருகி, மரண ஓலமிட்டபடி துடித்தனர்.
3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தை நிதீஷ் கண்ணா ஆஸ்பத்திரிக்கு வந்த சில நிமிடங்களிலேயே இறந்தான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த திவ்யா குழந்தை அம்மு ஆகியோரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு மற்றொரு குழந்தை அம்முவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் பொங்கல் பண்டிகைக்கு விண்டர்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற திவ்யா 4 நாள் கழித்து நேற்றுதான் அசோக் நகருக்கு சென்றாராம். இத்தனை நாள் கழித்து வருகிறாயே என திவ்யாவிடம் சிவகுமார் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தம்பதிக்கு இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிவகுமார் வீட்டிலிருந்து புறப்பட்டு அரக்கோணம் புது பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த திவ்யா தனது 2 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை சப்–கலெக்டர் முருகேசன் விசாரணை நடத்துகிறார்.
இச்சம்பவம் அரக்கோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating