4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களுடன் மூவர் கைது
நான்கு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களுடன் மூவரை கட்டுநாயக்க குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க முதலீட்டு வலய பகுதி தொழிற்சாலை ஒன்றில் போலி 500 ரூபா தாள்கள் கைமாற்றப்படுவதாக மேல் மாகாண குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து இத்தொழிற்சாலையின் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் விசாரணை செய்தபோது அவர் சில தகவல்களைக் கூறினார். அவர் மூலம் கிரியுல்ல பகுதியில் வசிக்கும் நபருக்கு போலி 500 ரூபா தாள்கள் அவசியம் தேவைப்படுவதாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அந்த நபர் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு வந்தபோது மறைந்திருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தொடர்ந்து அளவை பகுதியில் 3 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து போலி 500 ரூபா தாள் அச்சிட பயன்படுத்தப்பட்ட கணினி, வெற்றுத்தாள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
ஒரு போலி 500 ரூபா தாளை சில்லறையாகவோ அல்லது உண்மையான 500 ரூபாவாக மாற்றுவதற்கு மேலதிகமாக 500 ரூபா கமிஷனாக வழங்கப்பட்டு வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவர் தரகர்களின் உதவியுடன் இந்த பணமாற்றும் மோசடியை செய்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மகிந்த பிரபாத் ரணசிங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
போலி 500 ரூபா நோட்டுகள் குறித்து பொதுமக்களையும் வர்த்தகர்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறும் எவராவது போலி நோட்டுகளுடன் செயற்பட்டால் பொலிஸாருக்கு தகவல் தரும்படியும் அவர் அறிவித்துள்ளார்.