திருகோணமலையில் கடல்கோளினால் வீடுகளையிழந்த 350 குடும்பங்களுக்கு எஹெட் கறிற்றாஸ் உதவி
எஹெட் கறிற்றாஸ் அமைப்பு நவம்பர் 30 ஆம் திகதி வரை, திருகோணமலை மாவட்டத்தில் கடற்கோளினால் வீடிழந்தவர்களில் 350 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக்கையளித்துள்ளது. மாவட்ட எஹெட் கறிற்றாஸ் அமைப்பு 504 நிரந்தர வீடுகளை நிர்மாணித்து வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்தது. 20 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்ட நிலையில் உள்ளன. இவை இன்னும் பயனாளிகளுக்குக் கையளிக்கப் படவில்லை. 118 வீடுகளுக்கு சிறிய வேலைகளைச் செய்து முடிக்க வேண்டியுள்ளதாகவும் 14 வீடுகளுக்கு கூரை வேலைகள் செய்ய வேண்டியுள்ளதாகவும், இரு வீடுகளுக்கு சுவர் கட்டிய நிலையிலிருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட எஹெட் கறிற்றாஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட பிரதேசசெயலர் மற்றும் அரச அதிபர் ஆகியோருக்குச் சமர்ப்பித்தவாராந்த முன்னேற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பிரதேச செயலர் பிரிவில் சல்லி, குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் குச்சவெளி மற்றும் கிண்ணியா பிரதேச செயலர் பிரிவில் கிண்ணியா ஆகிய இடங்களில் கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்களின் சொந்தக்காணியில் 247 நிரந்தர வீடுகளை (சல்லி – 32, குச்சவெளி – 78, கிண்ணியா – 137) நிர்மாணித்துக் கொடுக்க ஏற்றிருந்தது.
இவற்றில் சல்லியில் 14 வீடுகளும் குச்சவெளியில் 65 வீடுகளும் கிண்ணியாவில் 137 வீடுகளும் பயனாளிக் குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கடல்கோளினால் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களுக்கு கோணேசபுரியில் 103, வடலிக் குளத்தில் 102, தாமரைவில்லுவில் 52 என 257 நிரந்தர வீடுகளைக்கட்டும் பொறுப்பை மாவட்ட எஹெட் கறிற்றாஸ் அமைப்பு ஏற்றிருந்தது.
அவற்றில் கோணேசபுரியில் 58 வீடுகளும் வடலிக்குளத்தில் 76 வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தாமரைவில்லுவில் 20 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டும் நவம்பர் 30 வரை பயனாளிக்குடும்பங்களிடம் கையளிக்கப்படவில்லை என்று முன்னேற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.