செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் 80 வயது பெண் கழுத்தை நெரித்து கொலை உறவினர் கைது
செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் 80 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றதாக உறவினர் கைது செய்யப்பட்டார்.பணம் கொடுக்க மறுப்பு திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மேட்டுஈகை கிராமத்தை சேர்ந்தவர் கெங்கப்பநாயக்கர்(வயது 88). விவசாயி. இவரது மனைவி ஆதிலட்சுமி(80). ஆதிலட்சுமியின் தங்கைக்கு 3 மகன்கள். இவர்களில் இளைய மகனான காளிதாஸ்(22) வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி பெரியம்மா ஆதிலட்சுமியின் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு செலவுக்கும் பணம் வாங்கி செல்வது வழக்கம். சம்பவத்தன்று ஆதிலட்சுமி தனியாக இருக்கும் போது வீட்டிற்கு சென்ற காளிதாஸ் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்,“வேலை செய்யாமல் ஊர் சுற்றுகிறாய். உனக்கு சாப்பாடும் போடமாட்டேன். செலவிற்கு பணமும் தர மாட்டேன்” என்று கூறியதாக தெரிகிறது. கழுத்தை நெரித்து கொலை இதனால் ஆத்திரம் அடைந்த காளிதாஸ் தனது கையால் ஆதிலட்சுமியின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் வாலிபர் காளிதாஸ் தப்பி ஓடி விட்டார்.
வீடு திரும்பிய கெங்கப்பநாயக்கர் மனைவி கொலையுண்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
கைது
தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியம், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டுகள் சீனுவாசன், ஞானமூர்த்தி, குப்புசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த காளிதாசை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். காளிதாசை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு தங்கமாரியப்பன் உத்திரவிட்டார்.