ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டி தற்கொலை செய்த வாலிபர்: போலீசார் விசாரணை…!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் குருசெல்வி (வயது20). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்தவர் குருவானந்தம் (24). இவருக்கு திருமணமாமகி 2 குழந்தைகள் உள்ளனர். குருவானந்தமும், குருசெல்விக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை குருசெல்வி கல்லூரிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். இதே பஸ்சில் குருவானந்தமும் சென்றார். 2 பேரும் பேசி கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் பஸ் கண்டக்டர் 2 பேரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் நைட்டி நிறுவனம் அருகே இறக்கி விட்டார்.
அதன் பின்னரும் அவர்களுக்குள் தகராறு முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் திடீரென குருவானந்தம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குருசெல்வியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் காயங்களுடன் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குருவானந்தம், குருசெல்வி இறந்து விட்டார் என கருதி எதிரே உள்ள கட்டிட வளாகத்திற்கு சென்று அங்குள்ள ஒரு மரத்தில் கைலியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரிவாள் வெட்டு காயங்களுடன் மயங்கி கிடந்த குருசெல்வியை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating