வங்கியில் கடன் வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக புகார் கோர்ட்டு உத்தரவுபடி 4 பேர் மீது வழக்குப்பதிவு
வங்கியில் கடன் வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோர்ட்டு உத்தரவுபடி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோர்டில் வழக்கு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், ராமகிருஷ்ணம்மாள், மகாலிங்கம். இவர்கள் 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்களிடம் வத்திராயிருப்பைச் சேர்ந்த நக்கீரன் என்பவர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக தலா ரூ. 10 ஆயிரம் வசூல் செய்தார். பின்னர் எங்களிடம் புரோ நோட்டு மற்றும் வங்கியில் பணம் எடுக்கும் படிவம் ஆகியவற்றில் கையெழுத்து வாங்கினார். அதன்பின் எங்கள் பெயரில் ரூ. 3 லட்சம் கடன் வாங்கி அவரது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொண்டார். இதேபோல் பலரிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி ஸ்டெல்லா, வங்கி மானேஜர் செந்தில்நாதன், வங்கி அதிகாரி கிறிஸ்டோபர் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிதிரேட்டு இது பற்றி விசாரிக்க கூமாபட்டி போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூமாபட்டி போலீசார் நக்கீரன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.