மலையகத்தில் மதுவை ஒழிக்க இ.தொ.கா.துரித நடவடிக்கை
மதுபோதைக்கு அடிமையாகி சீர்குலைந்து போகும் மலையக சமுதாயத்தை அதனிலிருந்து மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மலையகத்தில் மதுபாவனை விற்பனையைத் தடை செய்வது தெடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்ற தோட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இ.தொ.கா.தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது; பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இந்தியவம்சாவழி மக்களும் தமது உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் இ.தொ.கா.வின் பலத்தை அதிகரிக்க வேண்டும். கொழும்பில் தொழில்புரியும் மலையக இளைஞர், யுவதிகள் தமிழர்கள் என்ற ஒரு காரணத்தினால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். இ.தொ.கா.வினால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையினால் தற்போது விடுதலை பெற்றுவருகின்றனர்.
அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்க முடியாது. அத்தோடு எமது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை பார்த்துக் கொண்டிருக்கமுடியாததால் நாங்கள் எமது மலையக இளைஞர்கள் கைது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனிதவுரிமை மீறல் வழக்கையும் தாக்கல் செய்துள்ளோம்.
நாம் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் எமது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்.
மேலும், மலையக பெருந்தோட்டப்பகுதியில் எமது சமுதாயம் மதுபோதைக்கு அடிமையாகி சீர்குலைந்துள்ளது.
இதனால் எதிர் காலத்தில் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் மதுவிற்பனை செய்வதற்கான தடையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியுள்ளார்.
மலையகத்தில் எத்தனை தொழிற்சங்கங்கள் உருவாகினாலும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் துன்ப துயரங்களில் இ.தொ.கா. மாத்திரமே முன்நின்று செயற்படுகின்றது.
எனவே, தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளவுயர்வு, வீடமைப்பு, மின்சாரம் பெற்றுக்கொடுத்தல், மலையக மக்களின் பாதுகாப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் தனித்துவமாக நின்று செயற்பட்டு வருகின்றது.
எமது மக்களின் பாதுகாப்பு நலன்கருதியே இ.தொ.கா. செயல்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், உபதலைவர் வே.இராதகிருஷ்ணன் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.