அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க மாணவரை கைது செய்த வடகொரியா…!!
தங்கள் நாட்டுக்கு எதிராக விரோத போக்குடன் செயல்பட்டதாக அமெரிக்க மாணவரை வடகொரியா கைது செய்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒட்டோ பிரடெரிக் வாம்பியர். இவர் சுற்றுலா விசாவில் வடகொரியாவுக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கு அந்த நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டி, கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி மேற்கொண்டு எந்த தகவலும் கூறப்படவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர் கைது செய்யப்பட்ட தகவலை வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவை சேர்ந்த சுற்றுலா நிறுவனமான யெங் பயோனியர் டூர்ஸ், வாம்பியர் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது.
அதே நேரத்தில் சியோலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர், மாணவர் வாம்பியர் கைது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
வடகொரிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக உளவாளிகளை அமெரிக்கா அனுப்பி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating