புற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியுள்ளவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய அர்னால்ட் ஸ்க்வார்ஸனேகர்…!!
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் மிட்டர்மிய்ர்(75) என்பவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயை சமீபத்தில் கண்டுபிடித்த டாக்டர்கள் அவர் இனி நீண்டநாள் உயிர்வாழ முடியாது என தெரிவித்து விட்டனர்.
ஹாலிவுட் கதாநாயகன் அர்னால்ட் ஸ்க்வார்ஸனேகரின் தீவிரமான ரசிகரான ஜோசப், அர்னால்ட்டுடன் ஒரேயொருமுறை தொலைபேசி வழியாக பேச வேண்டும் என தனது மகளிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். சுருட்டுப் பிரியரான இவர் தனது அபிமான கதாநாயகன் புகைக்கும் சுருட்டுகளில் ஒன்றை அவரிடமிருந்து அன்பளிப்பாக பெற்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தந்தையின் இறுதி ஆசையை அவரது மகளான சாரா, சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியிட்டு அவருக்கு உதவும்படி பிறரை கேட்டு பிரசார இயக்கம் நடத்தி வந்தார். சுமார் ஒருலட்சம் பேரால் ‘ஷேர்’ செய்யப்பட்ட ஜோசப்பின் கடைசி ஆசை, இறுதியாக ஜெர்மனியை சேர்ந்த ஹாலிவுட் நடிகரான ரால்ப் மோல்லெர் என்பவரின் பார்வையில் பட்டது.
அப்போது அவர் அர்னால்டுடன் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆஸ்திரியாவின் கிட்ஸ்புஹெல் நகரில் தங்கியிருந்தார். ஜோசப்பைப் பற்றி அர்னால்டிடம் ரால்ப் மோல்லெர் தெரிவித்ததும் உடனடியாக அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய அர்னால்ட், தனது அபிமான சுருட்டுகளை அன்பளிப்பாகவும் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், ரால்ப் மோல்லெருடன் நின்று பிரத்யேகமாக ஜோசப்புக்காக அர்னால்ட் எடுத்துகொண்ட புகைப்படமும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜோசப்பின் மகள் சாரா பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
Average Rating