எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை-சரத்குமார்
தேர்தலில் எப்போதும் தனித்தே போட்டியிடுவோம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 15 ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுக்காமல் ஆட்சி நடத்தியதால், தமிழகம் பல்வேறு நிலைகளில் பின் தங்கியுள்ளது. தமிழக மக்களையும், தமிழகத்தையும் பாதுகாக்க சரியான வழியில் செயல்படும் அரசு தேவை. அதற்காக உருவாக்கப்பட்டது தான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. தேர்தல் எப்போது வந்தாலும் தனித்தே போட்டியிடுவோம். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. ஒரு அரசு 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்யவிடாமல் தடுக்கும் ஜனநாயக விரோத போக்கில் ஈடுபட மாட்டோம். நாற்காலியை பறிப்பது எங்கள் கட்சிக் கொள்கை அல்ல. 2008 ஜனவரி 20ம் தேதியன்று மதுரையில் நடைபெறும் முதல் அரசியல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும். இளைஞர்கள் புதிய கட்சிக்கு செல்கின்றனர் என்பதால் தான், 22 வருடங்களுக்கு பின்னர் திமுக இப்போது இளைஞரணி மாநாடு நடத்துகிறது.
தமிழக நலனில் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படாததால் மின்வெட்டு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 26 சதவீதம் மின் திருட்டு உள்ளது. இதைத் தடுத்தால் மின் பற்றாக்குறை பெருமளவு கட்டுப்படுத்தப்படும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்கு எங்களது ஆதரவு தொடரும்.
ஜனவரி 11ம் தேதியன்று மலேசியா சென்று அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்து, தமிழர்கள் நலனைக் காக்கும் வகையில் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார்.