சேரன் இயக்கத்தில் விஜய்: வெளிவராத தகவல்கள்
கமர்ஷியல் சட்டையை கழற்றி வைத்துவிட்டு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் எண்ணம் விஜய்யிடம் வேர்விட்டுள்ளது. கமர்ஷியல் இல்லாத எதார்த்தமான கேரக்டரில் நடிக்க முன்னணி (தமிழில்) நடிகர்கள் பலர் முரண்டு பிடிப்பதால் இயக்குனர்களே கதாநாயகனாகிக் கொண்டிருக்கும் காலமிது. இந்நிலையில் தனது பிடிவாதத்தை தளர்த்தி வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்க தயாராக இருப்பதாக இளையதளபதி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு விழாவில் விஜய் பேசியபோது ‘சேரன் ஒரு அற்பதமான இயக்குனர். ‘புதிய கீதை’ படத்தில் அவருடைய இயக்க மேற்பார்வையில் நான்கு நாட்கள் நடித்த அனுபவம் உள்ளது. நடிகர்களை அழகாக வேலை வாங்கும் திறமையை அவரிடம் கண்டுகொண்டேன். அவர் இயக்கும் ஒரு படத்தில் முழுமையாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் அவர் நடிகராகிவிட்டார்’ என்றார். இதற்கு பதில் அளித்த சேரன், விஜய்யின் ஆர்வத்தை நிறைவேற்ற காத்திருக்கிறேன் என்றார்.ஏற்கனவே ‘பொக்கிஷம்’ படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவர் கொடுத்த கால்ஷிட்டுகளை நான்தான் உபயோகப்படுத்தவில்லை. மீணடும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் விஜய்யை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பேன்”. இவ்வாறு சேரன் சொன்ன போது அதற்கு ஆமோதிப்பதுபோல தலையசைத்தார் விஜய். இதனைத் தொடர்ந்து சேரனிடம் கதை கேட்பதென முடிவுசெய்துள்ளாராம் விஜய். விரைவில் சேரன் இயக்கத்தில் விஜய்யின் தரிசனம் காண தயாராகுங்கள்.