11.47 நிமிடத்தில் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணவி
திருச்சி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 1,330 திருக்குறள்களையும் 11 நிமிடம் 47 விநாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். திருச்சியை அடுத்துள்ள மணப்பாறை அருகேயுள்ள குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வேந்திரனின் மகள் தீபா(10). இவர் அங்குள்ள ஊராட்சி பள்ளியொன்றில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் முன்னிலையில், 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்க ஆரம்பித்தார். 11 நிமிடம் 47 விநாடிகளில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்து அனைவரையும் பிரம்மிக்க செய்து விட்டார். மாணவி தீபாவிடம் அங்கிருந்த நிருபர்கள் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள், குறளின் எண்ணை சொல்லி அதற்கான் குறளை கேட்டல் உட்பட பல கேள்விகளுக்கு சளைக்காமல் டக் டக்கென்று பதில்களை சொல்லி அசத்தினார். இவர் கடந்த ஆண்டு நடந்த பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் 300 திருக்குறள்களை மனப்பாடமாக சொன்னார். இவருடைய திறமையை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் அவரை ஊக்கப்படுத்தியதால் அவர் தற்போது 1,330 குறள்களையும் ஒப்புவித்துள்ளார். மாணவி தீபாவின் இந்த சாதனை லிம்கா சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.