புலிகள் ஊடுறுவல்: கடலோர தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு – டிஜிபி
விடுதலைப் புலிகளின் ஊடுறுவலைத் தடுக்கும் வகையில் கடலோரத் தமிழகத்தில் கடற்படை, கடலோரக் காவல் படையுடன் இணைந்து தமிழக காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாக டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில், 2 விடுதலைப் புலிகள் போலீஸாரிடம் சிக்கினர். அவர்களுக்கு உதவியதாக சென்னையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னைக்கு வந்த இந்த இரு விடுதலைப் புலிகளும், ராமநாதபுரத்தில் படகு வாங்குதவற்காக வந்துள்ளனர். அவர்கள் வாங்கிய படகையும் போலீஸார் பறிமுதல் செய்து விட்டனர். இதையடுத்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்திற்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவுவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறையினர், கடற்படையினர், கடலோரக் காவல் படையினருடன் இணைந்து தமிழக போலீஸார் பணியாற்றுவர். தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜேந்திரன்.