பிரேசில் ஜெயிலில் இருந்து 100 கைதிகள் தப்பி ஓட்டம் – துப்பாக்கி சண்டையில் 2 பேர் பலி…!!
பிரேசில் நாட்டில் ரிசிப் நகரில் மத்திய சிறைச் சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்து கைதிகள் தப்பி ஓட திட்டமிட்டனர். வெடி மருந்துகளை சேகரித்து சிறைக்குள் குண்டு தயாரித்தனர். அதன் மூலம் அங்கிருந்த சுவரின் ஒரு பகுதியை தகர்த்தனர்.
தகவல் அறிந்ததும் ஜெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து தடுத்தனர். அதைத்தொடர்ந்து கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 2 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையே சிறையில் இருந்து 140 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் 40 பேரை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். இவர்களை தவிர தப்பி ஓடிய 100 கைதிகளை பிடிக்கும் பணி நடைபெறுகிறது.
ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் இடாமராகாவில் உள்ள மற்றொரு சிறையை உடைத்து 53 கைதிகள் தப்பி ஓடினர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
Average Rating