பறவை மோதியதால் பயணிகள் விமானத்தில் பாரிய துளை…!!
பயணிகள் விமானமொன்று பறவையொன்றுடன் மோதியதால் பாரிய சேதமடைந்த சம்பவம் நமீபியாவில் இடம்பெற்றுள்ளது.
நமீபிய எயார் லைன்ஸுக்குச் சொந்தமான ஏ.319 ரக விமானமொன்று அண்மையில், அங்கோலாவின் லுவனாடா நகரிலிருந்து நமீபிய தலைநகர் வைன்ட்ஹுக் நகரில் சென்றடைந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றது.
இவ் விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது பறவையொன்று மோதியதால் விமானத்தின் அடிப்பகுதியில் பாரிய துளையொன்று ஏற்பட்டது.
அப் பறவையின் இரத்தம் மற்றும் இறகுகளின் பகுதிகளும் விமானம் சேதமடைந்த பகுதியில் காணப்பட்டன. அப் பறவை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் இடம்பெற்றபோது விமானத்தில் 112 பயணிகள் இருந்தனர். எனினும், பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் எயார் நமீபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
“பறவைகளின் தாக்குதலானது மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும். இத்தகைய பறவைத் தாக்குதல் இடம்பெற்றால் பயணிகளை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எமது விமானிகள் தமது பயிற்சிகளின்போது பெற்ற அறிவுறுத்தல்களை பயன்படுத்தினர்” என அந் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ் விமானம் தற்போது திருத்த வேலைகளுக்காக தென் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Average Rating