கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு
கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிறுநீர் போவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நிலாவும், அவரது கணவரான ஜெயராமனும், கிராமத்து பழக்க வழக்கப்படி, குழந்தையின் நெஞ்சு, தொப்புள் மற்றும் மர்ம உறுப்பு ஆகிய இடங்களில் ஊசியை சூடாக்கி அதை வைத்துள்ளனர். இப்படிச் செய்தால் குழந்தையின் உடல் நலம் சரியாகி, சிறுநீர் உபாதை தீரும் என்பது கிராமத்து மூட நம்பிக்கையாகும். ஆனால் இந்த கொடூர வழக்கம், பிறந்த அந்த சிசுவின் உயிரைப் பறித்து விட்டது. ஊசியால் சூடு போட்டதால் குழந்தையின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து குழந்தையை சூலகிரியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையின் நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை சனிக்கிழமை இரவு இறந்து விட்டது. ஊசியால் சூடு போட்டதால், குழந்தையின் மர்ம உறுப்பு செப்டிக் ஆகி விட்டது. இதனால்தான் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் போய் விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.