பருவநிலை மாற்றம்: உலக நாடுகளுக்கு ஐநா எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் உலக நாடுகளிடையே பதட்டம் ஏற்படும் ஐநா அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பருவ நிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் ஐநா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றம் அதிகரிக்கும் போது பனிப்பிரதேசங்கள் அதிகளவில் உருகுவதால் கடல்நீர் மட்டம் உயர்ந்து கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும், இதை தொடர்ந்து பனி மலையில் உருவாகும் ஆறுகள் நாளடைவில் வறண்டு போகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பசி, பட்டினி, அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் கடலோர பகுதிகளில் உள்ள பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் வீழ்ந்து விடும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போல் சீனாவில் வெப்பம் அதிகரிப்பதுடன், சோமாலியாவில் பசி, பட்டினி மேலும் அதிகரிக்கும் என்றும், ஆப்ரிக்க கண்டத்தில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஐநா சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக துவக்குவதன் மூலமே மேற்கூறிய சம்பவங்களை உலக நாடுகள் ஓரளவு தடுக்க முடியும் என்று ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் அசிம்ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.