கோவையில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசார்…!!
கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ளது நீலிக்கோணாம் பாளையம். இங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் நள்ளிரவு இளம்பெண் தலை வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது திருவனந்தபுரம்– சென்னை செல்லும் ரெயில் 500 அடி தூரத்தில் வேகமாக வந்தது.
குடியரசு தினத்தையொட்டி அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவு ஏட்டு சிவசந்திரன், போலீசார் மகேந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது தண்டவாளத்தில் இளம்பெண் தலை வைத்து படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று இளம்பெண்ணை குண்டுக் கட்டாக தூக்கி மீட்டனர். அடுத்த வினாடி ரெயில் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. நெஞ்சை உறைய வைத்த இந்த சம்பவம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.
மிகவும் பதட்டத்துடன் காணப்பட்ட பெண்ணை சமாதானப்படுத்திய போலீசார் அவரை ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணை நடத்தியதில் அவர் சிங்காநல்லூர் நீலிக்கோணாம்பாளையம் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவி தமிழரசி (வயது 24) என்பது தெரியவந்தது.
இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன்– மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தமிழரசி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து தமிழரசி அங்குள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இளம்பெண்ணை காப்பாற்றிய ஏட்டு சிவச்சந்திரன், போலீஸ்காரர் மகேந்திரனை ரெயில்வே இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லோகநாதன் பாராட்டினார்.
Average Rating