யோசிதவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட உள்ளது…!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்சவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படைச் சட்டத்தை மீறியதாகவும், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் யோசித ராஜபக்சவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யோசித ராஜபக்ச தொடர்பில் முழு அளவில் கடற்படையினர் விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த விசாரணை அறிக்கை ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திரட்டப்பட்டுள்ள சாட்சியங்கள் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையில் பெரும்பாலும் யோசித ராஜபக்சவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத்தொடரப்பட வேண்டுமென ஜனாதிபதி பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யோசித ராஜபக்சவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படை அதிகாரியாக கடமையாற்றி அதே காலப்பகுதியில் கார்ல்டன் நெட்வர்க்ஸ் ஊடக நிறுவனத்தின் தலைவராகவும் யோசித கடமையாற்றியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
படையதிகாரியாக கடமையாற்றும் வேளையில் வேறும் நிறுவனமொன்றில் பதவி வகிப்பது சட்டத்திற்கு முரணானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படையினரிடம் எழுத்து மூல அனுமதி பெற்றுக்கொள்ளாது பல தடவைகள் வெளிநாட்டு பயணங்களை யோசித மேற்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கடற்படைத் தளபதிகளுக்கு கூட இவ்வாறான வரப்பிரசாதம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யோசித ராஜபக்ச 30 தடவைகளுக்கு மேல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ நீதிமன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் யோசித தண்டிக்கப்படுவார் என பாதுகாப்புத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating