ஜாவா தீவு அருகே பலத்த பூமி அதிர்ச்சி இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி பீதி
இந்தோனேசியாவின் ஜாவா தீவு அருகே பலத்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மீண்டும் சுனாமி பீதி நிலவுகிறது. மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் கடந்த 17-ந் தேதி கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதில் 596 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. 9,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 73 பேரை இன்னும் காணவில்லை. 74 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் சுசிலோ பாம்பங் யுதோயானோ சுற்றிப்பார்த்தார். சுனாமியால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தப்பணி ஆகஸ்டு 3-ந் தேதிவரை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் பூமி அதிர்ச்சி
இந்நிலையில் நேற்று மீண்டும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ஜாவா தீவு அருகே சுலாவேசி தீவையொட்டிய கடல் பகுதியில் இந்திய நேரப்படி பகல் 12.52 மணிக்கு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 71 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி, ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
சுனாமி பீதி
இந்த பூமி அதிர்ச்சியின் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக கோரோன்டாலோ மாகாண கவர்னர் பாதல் முகமது கூறினார்.
மக்கள் ஓட்டம்
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடினர். ராணுவ வீரர்கள், போலீசார், அதிகாரிகள், தன்னார்வ தொண்டர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர், மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜாவா தீவு பகுதியில், குறிப்பாக பாங்காந்தரன் நகரில் முழுஅளவில் வெளியேற்றும்பணி நடந்தது.