பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தாதீர்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள்…!!
ஜேர்மனியின் கோலொன் மற்றும் போன் பிராந்தியங்களில் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள களியாட்ட நிகழ்வுகளை முன்னிட்டு அந்நாட்டிலுள்ள குடியேற்றவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய விதிகளை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை அந்த நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள் ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்களிடம் பாலியல் ரீதியான தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அளவுக்கு மீறி மதுபானத்தை பாவித்தல், பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் போன்ற முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அந்த துண்டுப் பிரசுரங்களில் குடியேற்றவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதுவருட தினத்தன்று கோலொன் பிராந்தியத்தில் பெண்கள் பலர் மீது குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்களால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி களியாட்ட நிகழ்வுகளிலும் இதையொத்த தாக்குதல்கள் குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி துண்டுப்பிரசுரங்கள் அரேபிய மொழி உள்ளடங்கலான பல மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன.
அதேசமயம் பாலியல் தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்க களியாட்ட நிகழ்வுகள் நடைபெறும் பிராந்தியங்களிலான பாது காப்பு நடவடிக்கையில் பெருமளவு பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரி கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating