3 மாணவிகள் தற்கொலை:ஒருவர் சரண்…!!
சின்னசேலம் அருகே உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் சரண்யா, மோனிசா, பிரியங்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்து உள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கல்லூரி தாளாளர் வாசுகி, அவருடைய கணவர் சுப்பிரமணியன், மகன் சுவாகித் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் கலாநிதி, சுவாகித்வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாசுகி கோர்ட்டில் சரண் அடைந்தார். 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கல்லூரி தாளாளர் தங்களை கொடுமைப்படுத்தியதாக மாணவிகள் புகார் கூறினார்கள்.
இந்த கொடுமைகளுக்கு உடந்தையாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆதிதிராவிட புரட்சிக் கழகத்தின் தலைவர் பெரு.வெங்கடேசன் இருந்ததாகவும் மாணவிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பெரு.வெங்கடேசன் கல்லூரி நிர்வாகி போல எப்போதும் கல்லூரியிலேயே இருப்பது வழக்கம். அவர் தான் மாணவ, மாணவிகளையும், பணத்தை திருப்பி கேட்டு வரும் பெற்றோர்களையும் மிரட்டியதாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அவர் மீதும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். சென்னையில் அவர் இருப்பதாக தகவல் தெரியவர, போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர்.
பெரு.வெங்கடேசனை கைது செய்தால் மாணவிகள் சாவு பின்னணி தொடர்பாக முழு விவரங்களும் தெரியவரும் என போலீசார் கருதி வந்த நிலையில், அவர் இன்று மதியம் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating