குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை…!!
குடியாத்தம் சித்தூர்கேட் அருகே முனாப்டிப்போ என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சீதாராமன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி என்கிற ஜெயலட்சுமி (வயது 70). இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் லட்சுமி தனியாக வசித்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அருகில் உள்ளவர்களுடன் லட்சுமி பேசியுள்ளார். அதன்பின்னர் அவரை காணவில்லை. அவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது.
லட்சுமி அவருடைய உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என அருகில் உள்ளவர்கள் நினைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் லட்சுமியின் வீட்டில் லேசாக துர்நாற்றம் வீசியது. வீடும் பூட்டப்பட்டிருந்ததால் எலி அல்லது வேறு ஏதாவது உள்ளே இறந்திருக்கும் என அந்த பகுதி மக்கள் கருதினர். இந்த நிலையில் நேற்று துர்நாற்றம் அதிக அளவு வீசவே அவர்கள் சந்தேகம் அடைந்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் அழுகிய நிலையில் புழுக்கள் நெளிந்தபடி லட்சுமி பிணமாக கிடந்தார்.
அவரது வாயில் துணியை அடைத்து மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து லட்சுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டி லட்சுமி பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating