வத்தலக்குண்டுவில் தவறான சிகிச்சையால் இளம்பெண் பலி: ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை…!!
நிலக்கோட்டை அருகில் உள்ள விளாம்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டி. இவர் தனியார் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மீனா (வயது19) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
வயிற்றில் நீர்கட்டி ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனாவை வத்தலக்குண்டு பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர் இல்லாததால் செவிலியர்களே ஊசி போட்டு சிகிச்சை பார்த்துள்ளனர். இதனால் மீனா உயிரிழந்தார்.
இதனால் செவிலியர்கள் பதட்டம் அடைந்து ஆஸ்பத்திரியின் டாக்டர் சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மனைவி இறந்த விவரம் செல்லப்பாண்டிக்கு தெரியவரவே உறவினர்களுக்கு இது குறித்து கூறினார். உடனே ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் வினோஜி, சப்–இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடமும், மீனாவின் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வருவாய் ஆய்வாளர் முத்துவிநாயகம், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் குமார் ஆகியோரும் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து செல்லப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் தெரிவிக்கையில், ஆஸ்பத்திரியில் சேர்த்த சில நிமிடங்களிலேயே மீனாவிற்கு டாக்டர் சிகிச்சை அளிக்காமல் செவிலியர்கள் ஊசி போட்டு கொன்று விட்டனர். இதனை எங்களிடம் மறைக்க பிணத்தை வைத்து சிகிச்சை செய்வதுபோல நடித்தனர். தவறான சிகிச்சையால்தான் மீனா இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனாவின் உடலை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் உறவினர்கள் ஏராளமானோர் ஒன்று கூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Average Rating