கணவருடன் தகராறு; பெண் என்ஜினீயர் தற்கொலை…!!
கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகராறு-பிரிவு
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் துரைசாமிகார்டன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் ரேகா என்ற ரேவதி (23). இவரும் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்தார்.
இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்கள்தான் ஆகின்றன. கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ரேவதி, கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
தூக்கில் பிணம்
இந்த நிலையில் ரேவதி தனது அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவரது பெற்றோர் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பழவந்தாங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து அறைக்குள் சென்றனர். அங்கு ரேவதியின் பிணம் தூக்கில் தொங்கியது. அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘எனது இல்லற வாழ்க்கை தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆர்.டி.ஓ. விசாரணை
ரேவதி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மணிகண்டன்-ரேவதி திருமணமாகி 11 மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Average Rating