உயர் கல்வி கவுன்சில் துணைத்தலைவர் மீது தாக்குதல்: மாணவர் அமைப்பு நிர்வாகி கைது…!!
கேரள மாநிலம் கோவளத்தில் உலக கல்வி மாநாடு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டுக்கு மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த மாநாட்டின் மூலம் உயர் கல்வியை மேலும் வியாபாரமாக்க கூடாது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இங்கு அனுமதிப்பதன் மூலம் கல்வி வணிக மயமாகிவிடும் என்று அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனால் மாநாடு நடைபெறும் பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். எஸ்.எப்.ஐ. அமைப்பினரும் அங்கு திரண்டு தங்கள் எதிர்ப்பை கோஷங்கள் மூலம் தெரிவித்தனர்.
அப்போது கேரள மாநில உயர் கல்வி கவுன்சில் துணைத்தலைவர் சீனிவாசன் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் அவரை மாணவர்கள் கீழே தள்ளியதில் அவர் நிலை தடுமாறி விழுந்தார். அவரை ஒரு மாணவர் தாக்கியதாகவும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பல மாணவர்களை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் போலீசார் போட்டு பார்த்தனர்.
அப்போது உயர் கல்வி கவுன்சில் துணைத்தலைவர் சீனிவாசனை தாக்கிய மாணவர் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் சரத். எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவரான அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் எஸ்.எப்.ஐ. மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் கல்வி கவுன்சில் துணைத் தலைவரை தாக்கிய எஸ்.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த நிர்வாகி சரத்தை அமைப்பில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில் தாக்கப்பட்ட கேரள உயர் கல்வி கவுன்சில் துணைத் தலைவர் சீனிவாசனை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி சந்தித்தார். அப்போது அவரிடம் நலம் விசாரித்த உம்மன்சாண்டி அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Average Rating