காபூலில் தலிபான் தற்கொலைப்படை தாக்குதல்: 9 பேர் பலி…!!
ஆப்கானிஸ்தானில் இன்று போலீஸ் முகாம் மீது தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தலிபான் தீவிரவாத அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக, வரும் 6-ம்தேதி சர்வதேச பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கான முயற்சியை சீர்குலைக்கும் வகையில் மத்திய காபூலில் உள்ள போலீஸ் முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகாமிற்குள் செல்வதற்காக வரிசையில் நின்ற பொதுமக்களுடன் கலந்துவிட்ட தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில், 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் உள்துறை துணை மந்திரி தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும், காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Average Rating