வியட்நாம் விமானத்தில் ஊர்ந்த தேள்கள்
வியட்நாம் விமானம் பறக்க இருந்த நிலையில் அதில் தேள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனாங் என்ற இடத்தில் இருந்து வியட்நாம் தலைநகர் ஹனோய்க்குக் கிளம்பிய அந்த வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்த நிலையில் அதில் 2 தேள்கள் ஊர்வதை விமான சிப்பந்தி பார்த்தார். இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது. அந்த தேள்கள் அப்புறப்படுத்தப்பட்டதோடு பயணிகளும் இறக்கிவிடப்பட்டு, மேலும் ஏதும் தேள்கள் உள்ளனவா என தேடல் நடந்தது. சுமார் 4 மணி நேரம் தேடியும் மேலும் தேள்கள் ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த விமானம் கிளம்பிச் சென்றது. விமானத்துக்குள் தேள்கள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை நடக்கிறது. கடந்த ஏப்ரலில் வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் பறந்து கொண்டிருந்தபோது எலி ஓடி விளையாண்டு களேபரத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.