எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானத்துக்கு முரளியின் பெயர்
கண்டி அஸ்கிரிய மைதானத்துக்கு முத்தையா முரளிதரனின் பெயரை சூட்ட முடியாமல் போனாலும், எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானமொன்றுக்காவது முரளிதரனின் பெயர் சூட்டப்படுமென்று விளையாட்டுத்துறை அமைச்சரான காமினி லொக்குகே செவ்வாய்க்கிழமை சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான விமல் வீரவன்ச எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் காமினி லொக்குகே இவ்வாறு கூறினார். கண்டி அஸ்கிரிய மைதானத்துக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரனின் பெயரை சூட்ட யோசனையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. இதை விளையாட்டுத்துறை அமைச்சர் கவனத்துக்கு எடுத்துள்ளாரா” என்று விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் காமினி லொக்குகே “அஸ்கிரிய மைதானம் அரசாங்கத்துக்கு சொந்தமானதல்ல. அது கண்டி திருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான மைதானமாகும். எனவே, கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்துத்தான் இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியும். அப்படியே அது முடியாமல் போனாலும் கூட எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானமொன்றுக்கு முரளிதரனின் பெயர் சூட்டப்படும்” என்றார்.