செல்போன் வெடித்து சிறுவன் கண்கள் பாதிப்பு: எழும்பூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை…!!
சென்னை வியாசர்பாடியில் கடந்த வாரம் செல்போன் வெடித்து வீடு தீப்பிடித்ததில் கணவன்– மனைவி, மகன் ஆகிய 3 பேரும் பலியானார்கள்.
இந்த நிலையில் செல்போன் வெடித்ததில் 9 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:–
மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 40). இவரது மனைவி வெண்ணிலா.
இந்த தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ளன. 3–வது குழந்தை தனுஷ் (வயது 9). 4–ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வெண்ணிலா வீட்டில் செல்போனை சார்ஜரில் போட்டு இருந்தார். அப்போது போன் அழைப்பு வந்தது. சார்ஜர் ஆகி கொண்டிருந்தபோதே தனுஷ் எடுத்து பேசினார். அப்போது செல்போன் வெடித்து சிதறியது.
இதில் சிறுவனின் வலது கை மற்றும் 2 கண்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை வந்தனர். வலது கையில் ஏற்பட்ட தீக்காயத்துக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கண்களில் ஏற்பட்ட காயத்துக்கு எழும்பூர் கண் மருத்துவமனையின் இயக்குனர் வகீதாநசீர் தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
செல்போன் வெடித்ததில் சிறுவன் தனுசின் கண்பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டது. வலது கண்ணின் கருவிழி முற்றிலும் சேதம் அடைந்து இருந்தது. அறுவை சிகிச்சை மூலம் மாற்று கருவிழி பொருத்தப்பட்டது. இடது கண்ணில் கண் பிய்ந்துள்ளது. அது தைக்கப்பட்டது.
செல்போன் வெடித்ததில் அதன் துகள்கள் கண்களில் இருந்தன. ஆபரேஷன் போது அவற்றையும் டாக்டர்கள் அகற்றினார்கள்.
மேலும் வலது கண்ணில் கண்புரையும் இருக்கிறது. லென்ஸ் பொருத்தவும் திட்டமிடப்படுகிறது. ஆபரேஷன் செய்த காயம் ஆறுவதற்கு 1 மாதம் ஆகும். அதன்பிறகே லென்ஸ் பொருத்தும் பணி நடைபெறும்.
இதுகுறித்து எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குனர் வகீதாநசீர் கூறியதாவது:–
செல்போன் வெடித்து சிதறியதால் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து பெற்றோர்கள் பாடம் கற்க வேண்டும். சார்ஜ் ஆகி கொண்டு இருக்கும்போது செல்போனில் பேசக்கூடாது. சிறுவனின் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 2–வது அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பார்வை கிடைக்க ஒருமாதம் ஆகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating