மனித உரிமை ஆணைக்குழுவும் எம்மை ஏமாற்றி விட்டது;பாதிக்கப்பட்டோர் கவலை..!!
மனித உரிமை ஆணைக்குழுவும் தம்மை ஏமாற்றி விட்டது என வவுனியா வைகறையில் தங்கி சிகிச்சை பெறும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என வடமாகாண சுகாதார அமைச்சால் வவுனியாவில் அமைக்கப்பட்ட வைகறை சிகிச்சை நிலையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொடர்பாக அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் அவதூறான கருத்துக்களை பரப்பி வந்துள்ளார்.
இது தொடர்பில் அங்கு சிகிச்சை பெற்று வந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில், குறித்த உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது அங்கு சிகிச்சை பெற்று வந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட சிலரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தியோகத்தர் கடமையின் போது மது போதையில் சில சந்தர்பங்களில் இருப்பதாகவும், அவரது பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்தும் முறைப்பாடு செய்தவர்களை குறித்த உத்தியோகத்தர் பழிதீர்க்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், இது தொடர்பில் தமக்கு நீதி வேண்டி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 9 பேர் ஒன்றிணைத்து முறைப்பாடு செய்த போதும் இதுவரை அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
Average Rating