பாதுகாப்பு அதிகாரிகள்–ஊழியர்கள் இடையே பாகிஸ்தான் விமான நிலையத்தில் மோதல்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…!!
பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அரசுக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த விமான நிறுவன ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அரசு ‘எஸ்மா’ சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த முடியாது. மீறினால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
இச்சட்டம் அமல்படுத்தப்பட்டதால் போராட்டம் கடுமையானது. கராச்சி விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கி சூடு நடந்தது. அதில் விமான நிறுவன ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்துக்கு விமான நிறுவன ஊழியர்கள் போராட்டக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதை போலீஸ் துறை மறுத்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தினர் கலைக்கப்பட்டனர். ஆனால் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. கூட்டத்தில் இருந்தவர்கள்தான் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். விசாரணை நடத்தி உண்மை நிலை கண்டறியப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவன தலைவர் நசீர் ஜாபர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடிதத்தை பிரதமர் நவாஸ் செரீப்புக்கு அனுப்பியுள்ளதாக டி.வி.யில் கண்ணீருடன் தெரிவித்தார்.
Average Rating