ஆழ்வார்திருநகரி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த ஆட்டோ டிரைவர் கொலையா?: போலீசார் விசாரணை…!!
ஆழ்வார்திருநகரி அருகே அரசாங்க நகர் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கிணற்றில் பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டு அவர் யார் என்று விசாரணை நடத்தினர்.
அதில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் நாசரேத்தை சேர்ந்த துரைராஜ் இம்மானுவேல் என்பவரின் மகன் காட்லி அய்யாத்துரை (வயது40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காட்லி அய்யாத்துரை நாசரேத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு ரீட்டா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முதுகுவலியால் அவதிப்பட்ட காட்லி அய்யாத்துரை கடந்த சில மாதங்களாக ஆட்டோ ஓட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று அவர் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது.
அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்தனர். இருந்தபோதிலும் அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating