ஈராக்கில் கார் குண்டு வெடித்து 65 பேர் பலி
ஈராக்கில் 2 இடங்களில் நடந்த கார்க்குண்டு வெடித்த சம்பவங்களில் 65 பேர் பலியானார்கள். ஈராக் ராணுவமும், அமெரிக்க ராணுவமும் சேர்ந்து ஷியா தீவிரவாத அமைப்பான மக்தி ராணுவம் மீது பெரும் அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் பாக்தாத் நகரிலும் கிர்குக் எண்ணை நகரிலும் கார்க்குண்டுகள் வெடித்தன.
பாக்தாத் நகரில் மக்தி ராணுவம் வலுவாக இருக்கும் சதர் சிட்டி என்ற இடத்தில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு ஒரு மினிவேனில் தற்கொலை தீவிரவாதி வந்தான். அவன் அதை வெடிக்கச்செய்தான். இதில் 34 பேர் பலியானார்கள். 73 பேர் காயம் அடைந்தனர். இது நடந்த 2 மணி நேரம் கழித்து நகரசபை கட்டிடம் ஒன்றில் 2-வது குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.
கிர்குக் நகரில்
எண்ணைக்கிணறுகள் மிகுந்த கிர்குக் நகரில் மார்க்கெட் பகுதி அருகே உள்ள கோர்ட்டு கட்டிடம் அருகே கார்க்குண்டு வெடித்தது. இதில் 25 பேர் பலியானார்கள். 150-க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
குண்டு வெடித்ததும் அதன் காரணமாக அருகில் இருந்த கடைகளில் தீப்பிடித்தன. இதனால்தான் சாவு எண்ணிக்கை அதிகமானது என்று போலீசார் கூறுகிறார்கள். பலர் தீயால் எழுந்த புகையால் மூச்சுத்திணறி இறந்தனர்.
அமெரிக்கா பயணம்
இதற்கிடையில் ஈராக் பிரதமர் அல்-மாலிகி நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அங்கு அவர் ஜனாதிபதி புஷ்சை சந்தித்துப்பேச இருக்கிறார்.