டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் புகுந்து ‘மாணவர்களை சுட்டுக்கொல்வேன்’ மர்ம மனிதனின் டெலிபோன் மிரட்டல்…!!
டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் புகுந்து ‘மாணவர்களை சுட்டுக்கொல்வேன்’ மர்ம மனிதனின் டெலிபோன் மிரட்டலால் போலீஸ் அதிரடி சோதனை-
டெல்லியில் அதிகபட்ச பாதுகாப்பு மிகுந்த சாணக்கியபுரி பகுதியில் பிரிட்டிஷ் பள்ளி உள்ளது. மேலும் இப்பகுதியில் அமெரிக்கா, பிரான்சு, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்களும் இயங்குகின்றன. கடந்த நவம்பர் மாதம் பாரீஸ் நகரில் நடந்த தாக்குதலை தொடர்ந்து சாணக்கியபுரி பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் பிரிட்டிஷ் பள்ளிக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. அதில் மறுமுனையில் பேசியவன் “என்னிடம் ஏ.கே. 47 துப்பாக்கி உள்ளது. இப்போதே நான் அங்கு வந்து எல்லோரையும் சுட்டுக்கொல்லப்போகிறேன்“ என்று மிரட்டல் விடுத்து விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டான். இதனால் பள்ளியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
இதுபற்றி உடனடியாக டெல்லி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பள்ளியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் பள்ளியில் அதிரடி பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.
சுமார் 1 மணி நேரம் நடந்த போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கையில் மாணவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அதன்பின்னர் பள்ளியில் உள்ள மாணவ– மாணவிகள் பஸ்களில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொலைபேசியில் பள்ளி மாணவர்களை சுட்டுக்கொல்வேன் என்று மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
Average Rating