திருப்பதி மலைபாதையில் கார் திடீரென எரிந்தது: தமிழக பக்தர்கள் 5 பேர் தப்பினர்…!!
திருப்பதி மலைப்பாதையில் நேற்று காலை கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வந்த தமிழக பக்தர்கள் 5 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேர் காரில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றனர். காரை மணிகண்டன் என்பவர் ஓட்டினார். திருப்பதி இரண்டாவது மலைப்பாதையில் இணைப்பு சாலை அருகே நேற்று அதிகாலை 5 மணியளவில் கார் வந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்தது.
இதனால் டிரைவர் காரை நிறுத்தினார். இதையடுத்து அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர். இவர்கள் இறங்கிய சில நொடிகளில் கார் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்து முழுவதுமாக சேதமானது. உடனடியாக அனைவரும் காரில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர்.இதுபற்றி தகவல் அறிந்த தேவஸ்தான கூடுதல் முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் ரவீந்திராரெட்டி தலைமையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.
இதனால் இரண்டாவது மலைப்பாதையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேவஸ்தான விஜிலன்ஸ் மற்றும் போலீசார் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
Average Rating