சேலம் அருகே கட்டாய திருமணத்திற்கு கடத்தப்பட்ட மாணவி மீட்பு: வாலிபர் உள்பட 3 பேர் கைது
ஏற்காடு அருகே உள்ள ஜெரினாகாடு பகுதியை சேர்ந்தவர் மேரி. இவரது மகள் செல்வி (வயது 17). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மேரியின் தம்பி துரை சாமி. இவரது மகன் கருப்ப சாமி. இவர் மாணவி செல்வியை திருமணம் செய்ய விரும்பினார். தனது தந்தை துரைசாமியுடன் சென்று செல்வியை பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மேரி மறுத்துவிட்டார். இந்த நிலையில் பள்ளிக் கூடம் சென்ற செல்வியை கட்டாய திருமணத்திற் காக கருப்பசாமி கடத்திச் சென்றுவிட்டார். இது குறித்து மேரி கொண் டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை கட்டாய திருமணம் செய்ய உறவினர் கருப்பசாமி கடத்திச்சென்று விட்டார். அதற்கு அவரது தந்தை துரைசாமி, தாயார் முத்துலட்சுமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவி செல்வியை தேடிவந்தனர். அப்போது அவர் சின்ன சேலத்தில் ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று மாணவி செல்வியை மீட்டனர். அவரை வீட்டில் சிறை வைத்த கருப்பசாமி, துரைசாமி, முத்துலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவிக்கு இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.