நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 2 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த 12 தொழிலாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் நிï ஆவடி சாலை பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் தெரு, பள்ளியரசன் தெரு சந்திப்பில் மின்சார வாரியம் எதிரில் உள்ள நடைபாதையில் தங்கி இருந்தனர். பிளாஸ்டிக் கோணியால் கொட்டகை அமைத்து இருந்தனர். அதே நடைபாதையில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கி இருந்து கட்டிட வேலையில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் அவர்கள் அங்கேயே படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆவடி சாலை வழியாக சென்ட்ரல் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை பாந்தாலி ஆஸ்பத்திரி வளாகத்தில் வசிக்கும் பூசாரி வாஞ்சிநாதன் (23) என்பவர் காரின் எதிர் புறம் மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது. கார் நிலை தடுமாறி நடைபாதை மீது தறிகெட்டு ஏறியது. இதில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி நசுக்கியது. பின்னர் அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் போளூர் கலசப்பாக்கத்தை சேர்ந்த படவேட்டான் மனைவி முனியம்மாள் (வயது 45) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். படவேட்டான், சின்னப் பொண்ணு, தட்சணாமூர்த்தி, மற்றொரு தட்சணாமூர்த்தி, குப்பன், ஏழுமலை, நடராஜன், ராஜேஷ், அப்பன், தர்மா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மோட்டார்சைக்கிளில் வந்த வாஞ்சிநாதனும் படுகாயம் அடைந்தார். அவர்கள் அனைவரும் சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் திருச்சங்கல் பகுதியை சேர்ந்தவர்.
விபத்து நடந்த இடம் போர்க்களம் போல ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. தொழிலாளர்கள் தூங்கிய கொட்டகை சின்னா பின்னமாகி விட்டது. சம்பவ இடத்துக்கு அண்ணாநகர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த பகுதியில் தங்கியுள்ள தொழிலாளர்கள் ஆயிரம் பேரும் வெயில் நேரத்தில் கட்டிட வேலைகளில் ஈடுபடு வார்கள். மழைக்காலத்தின் போது சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்வார்கள்.
அந்த தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் இங்கு 20 வருடமாக தங்கியுள்ளோம். இதுவரை இப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை. நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றனர்.