சுனாமியில் காணாமல் போன சிறுமி மீட்பு – உரிமை கோரும் இரு குடும்பங்கள்…!!
இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமி ஒருவரை இரு குடும்பங்கள் உரிமை கோரியுள்ளன.
கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிய வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட, குறித்த சிறுமியை சுனாமியின்போது காணாமல் போன தங்களது குழந்தை என இரு குடும்பங்கள் சட்ட ரீதியாக உரிமை கோருகின்றன.
கல்முனையை சேர்ந்த தமிழ் குடும்பமொன்றும் அம்பாந்தோட்டையை சேர்ந்த முஸ்லிம் குடும்பமொன்றும் தனித்தனியாக உரிமை கோரும் மனுக்களை வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சிறுமியையும் உரிமை கோரும் இரு பெற்றோர்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி எதிர்வரும் 24ம் திகதி அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது அம்பாறையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு மையமொன்றில் வைக்கப்பட்டுள்ளார்
இந்தச் சிறுமி அறநெறி பாடசாலைக்கு சென்றிருந்த வேளை சுனாமியின் பின்னர் காணாமல் போயிருந்ததாக தமிழ் குடும்பம் கூறுகின்றது.
ஆனால் சுனாமி காலத்தில் மூன்று வயதான குழந்தையாக இருந்தபோது தந்தையின் கையிலிருந்து தவறிப் போன குழந்தை இந்த சிறுமி என முஸ்லிம் குடும்பம் கூறுகின்றது.
Average Rating