நீதிபதியின் தோட்டத்தில் மேய்ந்தது: ஆட்டை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய ‘பலே’ போலீசார்..!!
மாஜிஸ்திரேட் வீட்டு வளாகத்தில் அத்துமீறி மேய்ந்தது என குற்றம் சுமத்தப்பட்ட ஒரு ஆடு, சட்டீஸ்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஆட்டை விடுதலை செய்து நீதிபதி உத்தவு பிறப்பித்தார்.சட்டீஸ்கர் மாநிலத்தின் கோரியா மாவட்டத்திலுள்ள ஜனக்பூர் நகரைச் சேர்ந்த அப்துல் ஹாசன்(40) ஆடு மேய்ப்பவராக உள்ளார். அங்குள்ள மாவட்ட முதல்நிலை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ரத்ரே வீட்டு வளாகத்தில் உள்ள தோட்டம் பச்சைப் பசேலென்று இருப்பதைப் பார்த்த ஹாசனின் ஆடு, வாட்ச்மேன் கண்ணயர்ந்த நேரம் பார்த்து இரும்பு கேட் வழியே உள்ளே புகுந்து மேயத் தொடங்கியது.
ஆடு மேய்வதைப் பார்த்த வாட்ச்மேன் அதை துரத்திவிட்டான். ஆனால், தோட்டத்தின் ருசி, ஆட்டை மயக்கி விட்டது. எனவே, இரும்பு கேட்டை எகிறித் தாண்டி மேய்வதை ஆடு தொடர்ந்தது. இதனையடுத்து, ‘ஆட்டை அடக்கி வை’, என நீதிபதி மற்றும் போலீசார் தரப்பில் ஹாசனுக்கு பலமுறை எச்சரிக்கை விடப்பட்டது. அப்படி இருந்தும் ஆடு தனது வாடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்த நீதிபதி ரத்ரே, ஹாசன் மற்றும் ஆடு மீது நடவடிக்கை எடுக்குமாறு அத்துமீறல் புகார் அளித்தார். புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் ஹாசனையும், அவரது ஆட்டையும் திங்களன்று கைது செய்து போலீஸ் காவலில் வைத்தனர்.
நீதிமன்றத்தில் செவ்வாயன்று ஆஜர்படுத்தப்பட்ட ஹாசனுக்கு ஜாமீன் அளிக்க மறுத்த நீதிபதி, அவரை இரண்டு நாள் ரிமாண்டில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஆனால், ஆட்டை மட்டும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.
Average Rating