நாயைக் கடித்த மனிதன்
நாய் மனிதனைக் கடித்தால் செய்தியல்ல. ஆனால், மனிதன் நாயைக் கடித்து விட்டால்…. அது செய்தியென்று இதழியல் துறையைக் கற்போருக்கு செய்தி என்றால் என்ன என்பது பற்றி விளக்கமளிக்கப்படுவது முதுமொழியாகிவிட்ட நிலையில் அதனை யதார்த்தபூர்வமானதாக்கியுள்ளார் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர். கேரளத்தின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 65 வயதான பப்பன் என்ற முதியவரின் வாத்தை விசர்நாயொன்று கடித்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வயோதிபர் அந் நாயின் தொண்டைப் பகுதியை பலமாகக் கடிக்கவே அந்த இடத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறியதுடன், அந்தக் கிராம மக்கள் அந்நாயை அடித்துக்கொன்றுள்ளனர். கடந்த ஒரு சில வாரங்களாக இந்நாயால் பக்கக் கடவு எனும் மேற்படி கிராம மக்கள் பெரும் பீதியுடனிருந்தனர். கடந்த புதன்கிழமை வழிதவறி பப்பனின் பண்ணைக்குள் புகுந்த இந்த நாய் அங்கிருந்த வாத்துக்களை கவ்வி வெகுதூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பப்பன் அந்த நாய் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்துள்ளார். சேற்றுநிலப் பகுதியில் பப்பனுக்கும் நாய்க்குமிடையில் நடைபெற்ற நீண்டமோதலை பெருமளவு மக்கள் பார்த்துள்ளனர். இடையில் பப்பனின் ஒரு கையை நாய் கௌவிக் கொண்டதுடன், பப்பன் தனது கையை நாயின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு தனது முழுச் சக்தியையும் திரட்டி கையையும் விடுவித்துக்கொண்டே நாயின் தொண்டையில் பலமாகக் கடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பப்பனும் நாயும் களைப்படைந்ததால் பப்பனைக் காப்பாற்றிய மக்கள் நாயை அடித்துக் கொன்றுள்ளனர். முதலில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பப்பன், விசர்நாய்க் கடிக்கான மேலதிக சிகிச்சைகளுக்காக திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.