வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: கணவன் கைது
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வன்னியம் பகுதியை சேர்ந்தவர் ரவி. சலவை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு ஜனனி, முகேஷ்குமார் என 2 குழந்தைகள் உள்ளனர். ரவி குடி பழக்கம் உள்ளவர். அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியை அடித்து உதைத்து ரூ.1 லட்சம் வாங்கி வா என வரதட்சணை கொடுமை செய்து வந்தார். இதனால் சில தினங்களுக்கு முன்பு மகேஸ்வரி பணம் வாங்குவதற்காக முகப்பேரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு எதிர் பார்த்தபடி பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்தோடு மகேஸ்வரி கணவன் வீட்டிற்கு திரும்பினார். ஆனால் ரவி பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த மகேஸ்வரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து வரதட்சணை கேட்டு மகேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக ரவியை கைது செய்தனர்.