செந்துறையில் ஓடும் ரெயில் ஏறிய மாணவர் தவறி விழுந்து 2 கால்கள் துண்டானது: ரெயில் மீது சரமாரி கல்வீச்சு…!!
திருச்சி மாவட்டம் தாமரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராமு (வயது 19). இவர் அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் பிட்டர் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்ல ஒட்டகோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ஈச்சங்காடு செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் திருச்சி–கடலூர் பயணிகள் ரெயிலில் ஏறினார்.
செந்துறை ரெயில்வே நிலையத்தில் ரெயில் நின்ற போது ராமு கீழே இறங்கி நின்று கொண்டு இருந்தார். மீண்டும் ரெயில் புறப்பட்ட போது ஓடும் ரெயிலில் ஏறிய போது ராமு தவறி விழுந்தார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி அவரது 2 கால்களும் துண்டானதால் ரெயில் நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள் ரெயில் மீது கல் வீசி தாக்கினர். இதில் ரெயிலின் கண்ணாடி சேதம் அடைந்தது. பின்னர் மாணவர்கள் ரெயில் மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களுடன் செந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே 2 கால்களும் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்த ராமு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating