கூடுவாஞ்சேரி அருகே 2 என்ஜினீயரிங் மாணவர்கள்–நண்பர் காரில் கடத்தல்: 2 பேர் கைது…!!
பொத்தேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருபவர்கள் விஷால், ஜெயேந்திர ரெட்டி. ஆந்திராவைச் சேர்ந்த இருவரும் தனியாக அறை எடுத்து தங்கி படித்து வருகிறார்கள்.
நேற்று மாலை 2 பேரும் நண்பர் சக்கரவர்த்தியுடன் காரில் தைலாவரத்திற்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள மதுக்கடை அருகே நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000 கேட்டனர்.
அவர்களை மாணவர்கள் கண்டித்தனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 3 பேர் கும்பல், மாணவர்கள் விஷால், ஜெயேந்திர ரெட்டி மற்றும் அவரது நண்பர் சக்கரவர்த்தியை தாக்கி வலுக்கட்டாயமாக அவர்களது காரிலேயே ஏற்றி கடத்தி சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கடத்தல் பற்றி தங்களது நண்பர்களுக்கு செல்போனில் கூறினார். இது பற்றி அவர்கள் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உஷாரான போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து சோதனையை தீவிரப்படுத்தினர்.
இரவு 11 மணியளவில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் புகழ், சப்–இன்ஸ்பெக்டர் சின்னையா மற்றும் போலீசார் காட்டாங்கொளத்தூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது மாணவர்கள் கடத்தி சென்ற காரை மடக்கி பிடித்தனர்.
உடனே காரில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் தப்பி ஓடி விட்டான். மற்ற 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் காரில் இருந்த மாணவர்கள் விஷால், ஜெயேந்திர ரெட்டி மற்றும் அவரது நண்பர் சக்கரவர்த்தியை பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் நந்திவரம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த தமிழரசன், சக்திவேல் என்பதும் தப்பி ஓடியது அவர்களது நண்பர் சதீஷ் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய சதீசை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
என்ஜினீயரிங் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தால் கூடுவாஞ்சேரி பகுதி நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது.
Average Rating