ரெயில் தண்டவாளத்தில் துண்டு, துண்டாக கிடந்த ஆண் பிணம் போலீஸ் விசாரணை..!!
பெரம்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர், உடல் துண்டு துண்டாகி கிடந்தார். யாராவது அவரை கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரெயில் தண்டவாளத்தில் பிணம்
பெரம்பூர்-வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் உடல் துண்டு துண்டாகி கிடப்பதாக பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரது தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்டு தனித்தனியாக உடலுக்கு அருகில் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
யார் அவர்?
பிணமாக கிடந்தவர் யார்?, எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. காக்கி நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தார்.
யாராவது அவரை கடத்தி கொலை செய்து விட்டு, ரெயிலில் அடிபட்டு இறந்தது போல் போலீசாரை நம்ப வைக்க உடலை தண்டவாளத்தில் வீசி சென்றனரா? அல்லது அவரே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Average Rating