தந்தையின் இறுதி சடங்கை நிறைவேற்றிய புதுமைப்பெண்..!!
தானே மாவட்டம் பத்லாப்பூர் பகுதியை சேர்ந்தவர் குர்சர்(வயது 56). இவருக்கு 3 மகள்கள். குர்சர் ஒருவரின் வருமானத்தில் தான் அவரின் குடும்பம் நடந்து வந்தது. வறுமையின் பிடியில் இருந்த போதிலும் போராடி தனது மூத்த மகள் தீபிகாவை (வயது24) பி.காம் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்தார். மற்ற இரண்டு பேரையும் நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவரின் கனவுகளுக்கு காலம் முட்டுக்கட்டை போட்டது. திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட குர்சர் படுத்த படுக்கையானார்.
இதனால் அரவணைக்கவும், ஆதரிக்கவும் யாருமின்றி அவரின் குடும்பம் பரிதவித்தது. தன் மகள்களின் நிலைமையை எண்ணி குர்சர் கண்கலங்கினார். ஆனால் தீபிகாவிற்கு அவர் கொடுத்த படிப்பு குடும்பத்தை காப்பாற்றியது. தனி ஒரு ஆளாக தன் குடும்ப பொறுப்பை கையில் எடுத்தார் தீபிகா. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் அதில் வரும் வருமானத்தை வைத்து தன் குடும்பத்தை கவனித்தார். மேலும் தன் தங்கைகள் 2 பேருக்கும் அண்ணன் போல முன்நின்று திருமணம் செய்துவைத்தார்.
இந்த நிலையில் தீபிகாவின் தந்தை நேற்று முன்தினம் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது ஆண் மகனுக்கு பதிலாக உறவினர்கள் யாராவது முன்வந்து அவரது இறுதி சடங்கை செய்யுமாறு அங்கிருந்த பெரியவர்கள் அழைத்தனர். ஆனால் யாரும் அவர் இறுதி சடங்கை நடத்த முன்வரவில்லை. ஆனால் தீபிகா என் தந்தைக்கு ஆண்மகன் இல்லை என்றால் என்ன?, மகன் போல நான் இருக்கிறேன் என்று ஈமச்சடங்கை செய்ய உரிமைகோரினார்.
ஆனால் இதற்கு அங்கு கூடி நின்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து முறைப்படி பெண் குழந்தைகள் சடங்கை செய்யக்கூடாது அது நம் கலாசாரம் அல்ல என மறுப்பு கூறினர்.
ஆனால் அவர்களின் பேச்சை ஏற்கமறுத்த தீபிகா, என் குடும்பத்தில் அனைத்து கடமைகளையும் நான் ஆண் மகன் போல் நின்று நிறைவேற்றினேன். எனக்கு இந்த இறுதிச்சடங்கை செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. நாட்டில் பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி வரும் நிலையில் அனைவருக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். எனது தந்தைக்கு இறுதி சடங்கை நானே முன்னின்று செய்வேன் என வாதாடினார். பின்னர் அவரின் நியாயமான கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து புதுமைப்பெண் தீபிகா, தன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கு கடமைகளை செய்தார். சிதைக்கு தீ மூட்டினார். அவரது துணிச்சலான இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.
Average Rating