ஏமனில் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதல்: 14 ராணுவ வீரர்கள் பலி…!!
ஏமன் நாட்டில் இன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் அரசுப் படைகளின் தலைமையகம் உள்ளது. மேலும் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது விமான தாக்குதல் நடத்திவரும் சவுதி தலைமையிலான கூட்டுப்படையும் அங்கு முகாமிட்டுள்ளது. ஆனாலும், அங்கு ஐ.எஸ்., அல்கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகளின் வன்முறை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஏடனில் உள்ள ராஸ் அப்பாஸ் முகாமில் இன்று வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ராணுவ சீருடையில் வந்த ஒரு நபர், தனது உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில், 14 பேர் உடல் சிதறி பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏடன் ஆளுனரின் பாதுகாப்பு வாகனம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மறுநாள் இந்த சம்பவம் நடந்துள்து குறிப்பிடத்தக்கது.
Average Rating