மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான குழந்தையை கண்டுபிடிக்க 5 சிறப்பு படைகள்..!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மனம்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு 2013–ல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை திடீரென மாயமானது. குழந்தையை மீட்டுத்தரக்கோரியும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மீனாட்சி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மீனாட்சிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அரசு தரப்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
மேலும் மீனாட்சியின் ஆண் குழந்தையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டு பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் குழந்தையை கண்டுபிடிக்க 5 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். எனவே மீனாட்சியின் குழந்தையை கண்டுபிடிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கால அவகாசம் வழங்கி வழக்கை அடுத்த மாதம் (மார்ச்) 24–ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Average Rating