ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி: முதல் கட்ட ஓட்டுப்பதிவில் இந்திய அதிகாரிக்கு 2-வது இடம்
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கோபிஅனன் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சசிதரூர், தென்கொரிய வெளியுறவு மந்திரி பான்கி மூன், தாய்லாந்து துணை பிரதமர் சுராகியார்ட் சதீராதாய், இலங்கை சார்பில் ஜெயந்தா தனபாலா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஐ.நா. பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்கள் இதில் ஓட்டு போட்டனர்.
இதில் தென்கொரிய மந்திரி பான்கி மூனுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இவருக்கு 12 ஆதரவு ஓட்டுக்களும் 1 எதிர்ப்பு ஓட்டும் 2 நடுநிலை ஓட்டுக்களும் கிடைத்தன.
இந்தியாவின் சசிதரூருக்கு 10 ஆதரவு ஓட்டுக்களும், 2 எதிர் ஓட்டுக்களும், 3 நடுநிலை ஓட்டுக்களும் கிடைத்தன. தாய்லாந்து மந்திரிக்கு 7 ஆதரவு ஓட்டுக்களும், 3 எதிர் ஓட்டுக்களும் கிடைத்தன. இலங்கையில் தனபாலாவுக்கு 5 ஆதரவு ஓட்டுகளே கிடைத்தன.
இந்த ஆரம்ப கட்ட தேர்தல்கள் அக்டோபர் மாதம் வரை நடைபெறுகின்றன.