திருவனந்தபுரம் அருகே காப்பகம் நடத்தி மாணவிகளை கற்பழித்த பாதிரியார் கைது..!!
திருவனந்தபுரம் அருகே பெரும்பாவூரில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
பத்தனம்திட்டை பகுதியை சேர்ந்த ஜோன் பிலிப்போஸ் (வயது 45) என்பவர் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியாராகவும் உள்ளார்.
15 வயதுக்கு உட்பட்ட சில சிறுமிகள் இந்த காப்பகத்தில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
இந்த காப்பகத்தை சேர்ந்த 10–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக பள்ளியில் சோகமாக இருந்துள்ளார். அவரது கவனம் படிப்பில் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அந்த மாணவியிடம் ஆசிரியை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்களை அந்த மாணவி கூறி கதறி அழுதார்.
காப்பகத்தில் வைத்து அந்த மாணவியை பாதிரியார் ஜோன் பிலிப்போஸ் மிரட்டி கற்பழித்து உள்ளார். கடந்த 2012–ம் ஆண்டு முதல் அந்த மாணவிக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.
இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவதாக பாதிரியார் மிரட்டியதால் இதுவரை யாரிடமும் தான் கூறாமல் இருந்ததாகவும் அந்த மாணவி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தார். அவர்கள் இதுபற்றி பெரும்பாவூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பிறகு இதுபற்றி வழக்கு பதிவு செய்து ஜோன் பிலிப்போசை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த காப்பகத்தில் உள்ள மேலும் பல மாணவிகளிடம் பாதிரியார் ஜோன் பிலிப்போஸ் இதுபோன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அந்த காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
Average Rating